சுற்றுச்சூழல் தொடர்பான ஆழமான கதைகளை தயாரிக்க ஊடகவியலாளர்களுக்கு உதவிவரும் Earth Journalism Network, இம்முறை Earth Shorts எனும் புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதில், தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த 20 பேருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு வழிகாட்டியாக செயற்படுவதற்கு, முதற்தடவையாக இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆம், தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கான ஊடக வழிகாட்டியாக ஊடகவியலாளர் கலாவர்ஷ்னி கனகரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாக செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கொழும்பை தளமாகக் கொண்டு செயற்படும் கலாவர்ஷ்னி, கடந்த 2019ஆம் ஆண்டுவரை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் செய்தியாளர், செய்தி ஆசிரியர் மற்றும் செய்தி முகாமையாளர் என பல்வேறு பாத்திரங்களை வகித்துள்ளார். 2019ஆம் ஆண்டிற்கு பின்னர் சுயாதீன
ஊடகவியலாளராகவும் ஊடக பயிற்றுவிப்பாளராகவும் பல்வேறு நிறுவனங்களுக்காக பணியாற்றுகின்றார். கடந்த 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் கதை தயாரிப்புக்கான புலமைப்பரிசினை பெற்றுக்கொண்டதன் பின்னர், சுற்றுச்சூழல் தொடர்பான கதை தயாரிப்பு மாத்திரமன்றி, சூழலியல் கதைகளை மோஜோ (MOJO) ஊடாக வெளிப்படுத்துவது பற்றிய பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார்.
அதேபோன்று, Earth Shorts என்ற திட்டத்தில் சுற்றுச்சூழல் கதைகளை தயாரிப்பதற்காக, இம்முறை இலங்கையைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
